அகதிகள் விவகாரத்தில் போலந்துடன் மோத பெலாரஸ் விரும்பவில்லை என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
எனினும் எல்லையில் சிக்கித் தவிக்கும் 2,000 புலம்பெயர்ந்தோரை போலந்து ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்க வேண்டும் எனவும் இன்று திங்கட்கிழமை பெல்டா செய்தி நிறுவனத்துடன் பேசிய அலெக்சாண்டர் லுகாஷென்கோ வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வேண்டுமென்றே போலந்து எல்லைக்குள் பெலாரஸ் அனுமதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதாரத் தடைக்கு பழிவாங்கும் நடவடிக்கையான அகதிகளை கட்டுப்பாடின்றி பெலாரஸ் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் திட்டமிட்டே போலந்து எல்லை நோக்கி புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் குற்றச்சாட்டை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ மறுத்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் போலந்துடன் மோத பெலாரஸ் விரும்பவில்லை. இதனால் ஒரு போர் உருவாவதையும் விரும்பவில்லை. அப்படி ஒரு போர் இடம்பெற்றால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.
எனினும் புலம்பெயர்ந்தோர் பிரச்சினைக்குத் தீா்வு காணப்பட வேண்டும். எல்லையில் காடுகளில் சிக்கித் தவிக்கும் 2,000 புலம்பெயர்ந்தோரை போலந்து ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்க வேண்டும் எனவும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ வலியுறுத்தினார்.